25 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவசாயி கொலை வழக்கில் திடீர் திருப்பம்! பொலிசார் வெளியிட்ட பகீர் தகவல்
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு நிலம் தகராறு தொடர்பாக வெங்கடேஷ் மற்றும் அவருடைய மகன்கள் தனபால், வேணுகோபால் ஆகியோர் சேர்ந்து விவசாயி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து பலத்த காயம் அடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வெங்கடேஷ் மற்றும் அவருடைய மகன் தனபால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் வேணுகோபால் மட்டும் பொலிஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தலைமறைவானார்.
இந்த நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்ற ஸ்ரீஅபிநயா எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக வேணுகோபால் இருக்கும் இடம் குறித்து தெரியவந்துள்ளது.
சேலம் அருகே உள்ள குரங்கு சாவடி என்ற பகுதியில் வேணுகோபால் இருப்பதாக தகவல் அறிந்த பொலிசார் அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது கொலை நடந்த அடுத்த மாதமே ராணுவத்தில் சேர்ந்து விட்டதாகவும், இராணுவத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறினார்.
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி 24 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய தகவலை அறிந்த பொலிசார் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.