அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்து: 3 பேர் மரணம், 5 பேர் காயம்
அமெரிக்காவில் சாலை விபத்தில் 3 இந்திய மாணவர்கள் சம்பவ இடத்தில் மரணம்.
விபத்து ஏற்பட்டதற்கான சூழல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் மேற்கு மாசசூசெட்ஸில், கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேம் குமார் ரெட்டி கோடா (27), பவானி குல்லப்பள்ளி (22) மற்றும் சாய் நரசிம்ம படம்செட்டி (22), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெர்க்ஷயர் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மாசசூசெட்ஸ் மாநிலம் மற்றும் உள்ளூர் காவல்துறை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
greatandhra.com
அதிகாலை 5.30 மணியளவில் வடக்கு நோக்கிச் சென்ற காரும், தெற்கு நோக்கிச் சென்ற வாகனமும் மோதிக்கொண்டன. காரில் இருந்த மனோஜ் ரெட்டி டோண்டா (23), ஸ்ரீதர் ரெட்டி சிந்தகுண்டா (22), விஜித் ரெட்டி கும்மாலா (23) மற்றும் ஹிமா ஐஸ்வர்யா சித்திரெட்டி (22) ஆகிய 4 பேர் சிகிச்சைக்காக பெர்க்ஷயர் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காரில் இருந்தவர்கள் சர்வதேச கல்லூரி மாணவர்கள் என்றும், ஆறு பேர் நியூ ஹேவன் பல்கலைக்கழகத்திலும், ஒருவர் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்கள் என்றும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மற்ற வாகனத்தில் இருந்த 46 வயதான அர்மாண்டோ பாட்டிஸ்டா-குரூஸ் சிகிச்சைக்காக ஃபேர்வியூ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியூயார்க்கின் இந்திய துணைத் தூதரகத்திற்கு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
விபத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்துவரும் அதிகாரிகள், இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.