சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா! யார் அவர்கள்? வெளியான தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குழுவில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட கடைசி பரிசோதனையில் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
தற்போது டெல்லியில் உள்ள மற்ற சென்னை வீரர்கள் உட்பட அணி குழுவினர் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான காசி விஸ்வநாதன், பாலாஜி மற்றும் துப்புரவு பணியாளர் 3 பேருக்கும் திங்கட்கிழமை காலை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொற்று பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதியானால், 3 பேரும் சென்னை அணி பபுளுக்கு வெளியே ஒதுக்கப்படும் மையத்தில் சுமார் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
பின் இரண்டு முறை தொடர்ந்து பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியான பிறகே மீண்டும் அணிக்கு திரும்ப முடியும்.
ஏற்கனவே இரண்டு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.