9வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள் - பின்னணியில் இருந்த கொரியன் கேம்?
கொரியன் கலாச்சாரத்திற்கு அடிமையான 3 சகோதரிகள் 9வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள்
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த சேதன் குமார் அந்நிய செலாவணி வர்த்தகராக உள்ளார். இவர் 2 சகோதரிகளை திருமணம் செய்து, 2 மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் பாரத் சிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்துள்ளார்.

இன்று, அதிகாலை 2.15 மணியளவில் அவற்றின் மகள்களான பகி (12), பிராச்சி (14), மற்றும் விசிகா (16) ஆகியோர் பால்கனிக்கு சென்று கதவை தாளிட்டு ஒருவர் பின் ஒருவராக 9வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
அவர்களின் அலறல் மற்றும் தரையில் மோதிய சத்தம் கேட்டு கட்டட காவலாளி மற்றும் சிறுமிகளின் பெற்றோர் ஓடிச் சென்று பார்த்தபோது, 3 பேரும் இறந்து கிடந்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
கொரியன் கேம்
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 3 பேரும் கொரியன் கேமுக்கு அடிமையாக இருந்தது தெரிய வந்தது. அவர்கள் கைப்பட எழுதிய 8 பக்க கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கடிதத்தில், அதில் இருக்கும் அனைத்தையும் படிக்கும்படியும், அதில் இருக்கும் அனைத்தும் உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தங்களது தந்தையிடம் 'I'm really sorry. Sorry, Papa' எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். தொடர்ந்து, "கொரியாதான் எங்கள் வாழ்க்கை. கொரியா மீதான எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய காதலை, நீங்கள் என்ன சொன்னாலும், எங்களால் கைவிட முடியாது" என எழுதப்பட்டுள்ளது.

அவர்களது வீட்டு படுக்கையறையின் சுவரில் "நான் மிகவும் தனியாக இருக்கிறேன்" மற்றும் "என்னை உடைந்தவர்களின் இதயமாக ஆக்குகிறேன்" போன்ற குழப்பமான சொற்றொடர்கள் எழுதப்பட்டிருந்தன.
கொரோனா காலத்தில் இந்த சிறுமிகள், மொபைல் விளையாட்டுக்கு அடிமையாக தொடங்கினார்கள். அதன் பிறகு அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து, அதன் பின்னர் பள்ளிக்குச் செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.
மேலும், 3 சிறுமிகளும் கொரியப் பெயர்களையும் தங்களுக்கு சூட்டிக்கொண்டனர். இதில், பிராச்சியே இவர்களை வழிநடத்தியுள்ளார்.
சமீபத்தில் இவர்களின் தந்தை மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்தது இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் கடிதத்தின் மூலம், கொரிய கலாச்சாரத்திற்கு அடிமையாக உள்ளது தெரிய வந்தாலும், விளையாட்டு டாஸ்கால் உயிரிழந்தார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறுமிகளின் மொபைல் போன்களை பகுப்பாய்வு செய்த பின்னர் அது உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக Blue Whale challenge, momo challenge போன்ற பணி சார்ந்த விளையாட்டுகள் மூலம் இந்தியாவில் உயிரை மாய்த்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
முதலில் இது போன்ற விளையாட்டுகளில் தன்னை வெளிநாட்டவராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் நபர் முதலில் நன்றாக பேசி நட்பை வளர்த்துக்கொள்வார்.
அதன் பின்னர் நள்ளிரவில் கண் விழிப்பது போன்ற எளிமையான செயல்களை செய்ய சொல்வார்கள். இதில் 50வது செயலாக உயிரை மாய்த்துக்கொள்வது இருக்கும். பெரும்பாலும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அல்லது உளவியல் ரீதியான கையாளுதல் மூலம் பணிகளை முடிக்க கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |