பிரித்தானியாவில் மருத்துவரின் அனுபவமின்மையால் உயிரிழந்த இந்தியக் குழந்தை
பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்தியக் குழந்தைக்கு நேர்ந்த துயர முடிவு
கிஷோர், அம்ரிதா சோப்ரா தம்பதியரின் மகன் ஆரவ் சோரா (3).
ஆரவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே, அவனது கல்லீரலின் மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த சோதனைக்காக ஆரவின் நெஞ்சு வழியாக ஊசி ஒன்றைச் செலுத்தி, அவனது கல்லீரலில் மாதிரியை சேகரிக்கவேண்டியிருந்தது.
விடயம் என்னவென்றால், மிகவும் கவனமாக, அனுபவம் மிக்க மருத்துவர்கள் செய்யவேண்டிய அந்த விடயத்தை, போதுமான அனுபவம் இல்லாத ஒரு பயிற்சி மருத்துவர் செய்துள்ளார்.
சரியான அனுபவம் இல்லாததால் அந்த பயிற்சி மருத்துவர் குழந்தையின் நெஞ்சிலிருந்த ஒரு முக்கியமான இரத்தக் குழாயை சேதப்படுத்த, ஆரவ், மார்புக்கூட்டில் இரத்தம் கட்டி உயிரிழந்துவிட்டான்.
2023ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த துயரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடந்துவந்தது.
இந்நிலையில், அந்த விசாரணையின் முடிவில், அந்த பயிற்சி மருத்துவரின் தவறால், ஆரவ் நீண்ட ஒரு மாரடைப்பால் அவதியுற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை, ஆரவ் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்காக வருத்தம் மட்டும் தெரிவித்துள்ளது...
புதிய கல்லீரலுடன் தங்களுடன் தங்கள் பிள்ளை ஒரு புதிய வாழ்வைத் துவங்குவான் என நம்பியிருந்த ஆரவின் பெற்றோரோ, பிள்ளையை இழந்து தவித்துவருகிறார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |