பிரித்தானியர்கள் இந்த 30 நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்! பட்டியலை வெளியிடவுள்ள அரசு
பிரித்தானிய அரசு பயணிக்க ஏற்ற நாடுகளாக கிட்டத்தட்ட 30 நாடுகளை அதன் பட்டியலில் சேர்த்து அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் மே 17-ஆம் திகதி முதல் மக்கள் தங்கள் விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா, வங்கதேசம், பிரேசில், அர்ஜென்டினா, ஜிம்பாப்வே, கொலம்பியா, சிலி என மொத்தம் 40 நாடுகளை பயணிக்க ஆபத்தான நாடுகளாக பிரித்தானிய அரசு அதன் 'சிவப்பு பட்டியலில்' சேர்த்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நாடுகளுக்கு இடையே பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியர்கள் தங்கள் விடுமுறைக்கு எந்தெந்த நாடுகளுக்கு மட்டும் சுற்றுலா செல்லலாம் என ஒரு 'பச்சை' பட்டியலை அரசு தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில் இலங்கை, மொரோக்கோ, ஜமைக்கா, மால்டா, போர்ச்சுகல், இஸ்ரேல், ஐஸ்லாந்து, மாலத்தீவுகள், சில கரிபியன் தீவுகள், பிரித்தானிய எல்லைக்கு உட்பட்ட சில தீவுகள் என குறைந்தது 30 நாடுகள் அந்த 'பச்சை' பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.