சுவரில் துளையிட்டு 30 மில்லியன் யூரோ கொள்ளை - ஜேர்மனியில் வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள்
ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில், 30 மில்லியன் யூரோ மதிப்பிலான கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியில் வங்கி கொள்ளை
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கெல்சென்கிர்சென் (Gelsenkirchen) நகரத்தில், ஸ்பார்காஸே (Sparkasse) வங்கிக்கிளை ஒன்று இயங்கி வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வங்கி மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளை கும்பல் ஒன்று, சுவரில் துளையிட்டு பாரிய வங்கி கொள்ளையை நிகழ்த்தியுள்ளது.
கொள்ளை கும்பல் ஒன்று, திருடப்பட்ட கார் மூலம் வந்து, வாகன நிறுத்தத்தில் இருந்து வங்கியின் நிலத்தடிப் பாதுகாப்பு அறைக்குள் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

அங்கிருந்த 3,000 க்கும் அதிகமான பாதுகாப்பு பெட்டிகளை, உடைத்து அதில் உள்ள பணம், தங்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டு, மீண்டும் அதே துளை வழியாக தப்பி சென்றுள்ளனர்.
30 மில்லியன் யூரோ
கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் தங்கத்தின் மதிப்பு, சுமார் 30 மில்லியன் யூரோ(இலங்கை மதிப்பில் ரூ.1,094 கோடி) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்தவர்கள் ஒரு கருப்பு ஆடி RS 6 காரில் புறப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட் முன்னதாக வடக்கு ஜேர்மனியின் ஹனோவர் நகரில் இருந்து திருடப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த வங்கிக்கிளையின் வாடிக்கையாளர்கள், வங்கி முன்னர் குவிந்துள்ளனர்.
இதில் பலர் தங்கள் இழந்த மதிப்பு காப்பீடு தொகையை விட அதிகம் என தெரிவித்துள்ளனர். ஒரு பெட்டியின் சராசரி காப்பீட்டு மதிப்பு சுமார் 10,000 யூரோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |