ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள்
ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் அரசியல் சகாப்தம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது...
கிழக்கு ஜேர்மனியில், ஒரு போதகரின் மகளாக பிறந்தவர் ஏஞ்சலா. பின்னர் ஒரு இயற்பியலாளாராகி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபின் அரசியல் வாழ்வில் கால் எடுத்துவைத்தார் அவர்.
Helmut Kohl என்பவர் ஜேர்மன் சேன்ஸலராக இருக்கும்போது, அவரது அமைச்சரவையில் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த அர்சியல்வாதிகள் யாருமில்லை என்பதற்காக, அந்த இடத்தை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏஞ்சலா.
அப்போது, அவர் ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராவார் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
அவர் மகளிர் மற்றும் இளைஞர் நல அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரையிலான அவரது புகைப்படங்களை Herlinde Koelbl என்ற புகைப்படக்கலைஞர் சேகரித்து வைத்துள்ளார்.
படபடவென ஐரோப்பா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிய ஏஞ்சலாவின் புகழ், அவர் சிரிய அகதிகளுக்கு தன் நாட்டைத் திறந்துவிட்டபோது உலக அளவில் பெரிதும் பேசப்பட்டது.
ஆனால், ஜேர்மனியிலோ அதற்கு எதிர்ப்பு உருவானது. அதுபோக, கொரோனா பரவத் தொடங்க, முதலில் எல்ல நாடுகளை விடவும் சாமர்த்தியமாக அதைக் கையாண்ட ஜேர்மனியில் பிறகு கொரோனா பரவல் கைமீறிப்போக, அத்துடன் பெருவெள்ளம் ஒன்று வந்தபோது அதை சரியாக அரசு கையாளவில்லை என மக்கள் கோபமடைய, அவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக தனது 16 ஆண்டு கால ஜேர்மன் சேன்ஸலர் பதவியையும், கட்சித் தலைமைப் பொறுப்பையும் துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார் ஏஞ்சலா. அதன்படி, இந்த ஆண்டு இறுதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
30 ஆண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால், கொஞ்சம் படிக்கவேண்டும், கொஞ்சம் தூங்கவேண்டும் என்கிறார் அந்த இரும்புப் பெண்மணி எளிமையாக.