பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 300 புலம்பெயர்வோர்: நிகழ்ந்த பயங்கரம்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட 300 புலம்பெயர்வோரை, போராளிக் கும்பல்கள் கடத்திவைத்துக்கொண்டு பணம் கொடுக்காவிட்டால் சிறுநீரகத்தை அகற்றிவிடுவோம் என மிரட்டிய பயங்கரம் ஒன்றைக் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 300 புலம்பெயர்வோர்
கடந்த ஆண்டு கோடையின்போது, ஈராக்கி குர்திஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக 300 புலம்பெயர்வோர் புறப்பட்டுள்ளனர்.
நோவா ஆரோன் என்னும் கடத்தல்காரர், ஆயிரக்கணக்கான டொலர்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களை வட ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் கொண்டுவருவதுதான் திட்டம். அதற்கு, லிபியாவிலுள்ள போராளிக்குழுக்கள் உதவுவது வழக்கமாம்.

ஆனால், அந்த புலம்பெயர்வோர் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை அடைந்ததுமே, அங்கிருந்த போராளிக்குழு ஒன்று அவர்களைப் பிடித்து ஓரிடத்தில் அடைத்துள்ளது. முந்தைய முறை ஆரோன் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்று கூறி, அந்த போராளிக்குழு அந்த புலம்பெயர்வோரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளது.
ஒரு சிறிய அறைக்குள் சுமார் 178 பேர் அடைத்துவைக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு கழிப்பறைதான் இருந்துள்ளது. கழிப்பறையில் கொஞ்சம் நேரம் கூடுதலாக செலவிட்டவர்களுக்கு அடி விழுந்துள்ளது.
உணவில்லாமல், உட்கார்ந்துகொண்டே தூங்கி, அடியும் உதையும் வாங்கி சித்திரவதை அனுபவித்துள்ளார்கள் அந்த புலம்பெயர்வோர்.
இதற்கிடையில், அவர்களுடைய குடும்பங்களுக்கு திகிலூட்டும் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் லிபியாவில் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுக்கு 5,000 டொலர்கள் கொடுத்தால் மட்டுமே அவர்களை விடுவிப்போம் என்றும் போராளிக்குழுக்கள் அச்சுறுத்தியுள்ளன.
அத்துடன், பிணைத்தொகையை செலுத்தாவிட்டால், அதற்கு பதிலாக அந்த புலம்பெயர்வோரின் சிறுநீரகங்களை எடுத்துக்கொள்வோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதாரமாக, அந்த புலம்பெயர்வோரில் சிலர் அடித்து நொறுக்கப்படும் காட்சிகளும், சிலர் அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் வீடியோக்களும் அவர்களுடைய குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பயந்துபோன பல குடும்பங்கள், ஏற்கனவே பிரித்தானியாவுக்கு செல்வதற்காக கொடுக்கப்பட்ட பணத்துடன், கூடுதலாக பிணைத்தொகை செலுத்தி தங்கள் பிள்ளைகளை, குடும்பத்தினரை மீட்டுள்ளார்கள்.
அவ்வகையில், ஜனவரி மாதம் சுமார் 110 பிணைக்கைதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அப்படி பிணைத்தொகை கொடுத்து திரும்பியவர்கள் உடலில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததற்கான தழும்புகள் உள்ளன.
இந்நிலையில், இப்படியெல்லாம் நடந்தும் ஈராக்கி குர்திஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்குச் சட்ட விரோத புலம்பெயர்வோர் புறப்படுவது நிற்கவில்லை என்கிறார்கள் உள்ளூர் அதிகாரிகள்.
கடத்தப்பட்ட பிணைக்கைதிகள் தாங்கள் அனுபவித்த துயரங்களைக் குறித்து தங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறட்டும், அப்படியாவது, இப்படி சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குச் செல்ல பயம் வரட்டும் என்கிறார்கள் அவர்கள்!
இந்நிலையில், பிணைக்கதிகளாக பிடித்துவைக்கப்பட்டவர்களில் ஒரு இளைஞனுடைய சிறுநீரகத்தை அகற்றும்போது அவர் உயிரிழந்துள்ளார்.
ஈராக்கில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும்போதுதான் அவரது தந்தைக்கு ஒரு விடயம் தெரியவந்துள்ளது. அது, இவ்வளவு நடந்தும், உயிரிழந்தவரின் உறவின் முறையாரில் சகோதர உறவு முறை கொண்ட இரண்டுபேர், பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுள்ளார்கள் என்ற செய்திதான் அது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |