31 கொரோனா நோயாளிகள் தப்பியோடியதால் பரபரப்பு! தேடுதல் பணி தொடக்கம்
இந்திய மாநிலம் திரிபுராவில் கோவிட்-19 பராமரிப்பு மையத்திலிருந்து 31 கொரோனா நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் அருந்ததிநகர் பகுதியில் உள்ள பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனத்தில் (P.R.T.I ) தற்காலிக பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 31 கொரோனா நோயாளிகள் நேற்று தப்பியிடியதாக மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் ஷைலேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.
பராமரிப்பு மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், அவர்கள் கட்டிடத்தின் பின்னல் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய அனைவரும் திரிபுரா மாநில ரைஃபிள்ஸின் ஆட்சேர்ப்பு பேரணியில் பங்கேற்க உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், பத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து இங்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அவர்களின் முகவரிகள் மற்றும் மொபைல் எண்கள் எங்களிடம் உள்ளன. தப்பித்தவர்களின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்தோம், ஆனால் அவர்கள் எப்படியோ திரிபுராவை விட்டு வெளியேறிவிட்டனர்" என திரிபுரா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் “இந்த சம்பவம் குறித்து நாங்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்துள்ளோம், மற்ற மாநிலங்களிலிருந்து இங்கு வந்தவர்கள் என்பதால் ரயில்வே அதிகாரிகளையும் எச்சரித்துள்ளோம்.
அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நாங்கள் ஒரு தேடல் நடவடிக்கையைத் தொடங்கினோம்” என்று சதர் துணைப்பிரிவு பொலிஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பராமரிப்பு மையத்திலிருந்து நோயாளிகள் தப்பியோடியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.