ஜேர்மனிக்காக கதறி அழுத சிறுமி... இணையத்தில் குவிந்த நிதி! எத்தனை ஆயிரம் பவுண்ட்?
யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்திடம் ஜேர்மனி தோற்றதால் மைதானத்தில் கதறி அழுத சிறுமிக்காக சுமார் 32,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.
யூரோ கால்பந்து தொடரில் ரவுண்ட் 16 சுற்றில் ஜேர்மனியை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து.
இந்த போட்டியை மைதானத்தில் நேரில் கண்ட ஜேர்மனி ரசிகையான சிறுமி ஒருவர் கதறி அழுதார், அந்த காட்சி மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி, சிறுமி அழுத படம் இணையத்தில் வைரலானது. இங்கிலாந்து ரசிகர்கள் சிறுமியை மோசமாக கிண்டலடித்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கினர்.
இதனையடுத்து, வேல்ஸைச் சேர்ந்த Joel Hughes என்பவர், பிரித்தானியாவில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல, நாங்கள் அரவணைப்போம் என்பதை காட்ட, கிண்டலடிக்கப்பட்ட சிறுமிக்காக 500 பவுண்ட் இலக்காக வைத்து JustGiving இணையதள பக்கத்தில் நிதி திரட்டலை தொடங்கினார்.
சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்க பலர் நன்கொடை அளித்ததால் நான்கு நாட்களில் சுமார் 32,667 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தை கண்டறிந்து நிதியை வழங்கும் பொறுப்பை JustGiving ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.