மீண்டும் எனக்கு விளையாட ஆசை! டிவில்லியர்ஸ் சொன்ன தகவல்: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் உலகக்கோப்பை தொடரில் விளையாட தனக்கு ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கிரிக்கெட் உலகின் அதிரடி ஆட்டக்காரர்களின் வரிசையில் இருப்பவர் தான் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்கா வீரரான இவர் 360 டிகிரி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் டிவில்லியர்ஸ், திடீரென்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவரின் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தென் ஆப்பிரிக்கா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக மீண்டும் களமிறங்கவுள்ளதாகவும், அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பவுச்சருடன் நான் பேசியுள்ளேன். என்னிடம் அவர் மீண்டும் விளையாட விருப்பமா? என்று முன்பே கேட்டிருந்தார்.
அதற்கு தற்போது நான் விளையாட விருப்பமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறேன். இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இது பற்றிய ஆலோசனை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணியில் இடம் இருந்தால், அதேபோல் மீண்டும் அணியில் இணைந்து விளையாடும் அளவுக்கு எனக்கு உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் நான் தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் களம் இறங்கி விளையாட உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் அடுத்து உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளதால், டிவில்லியர்ஸ் நிச்சயமாக சேர்க்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.