கொரோனாவுடன் போராடும் இந்தியாவுக்கு உதவ முன் வந்த 40 நாடுகள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனாவால் போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க 40 நாடுகள் முன்வந்துள்ளதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாட்டில் தினந்தோறும் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை லட்சக்கணக்கை எட்டி வருகிறது.
குறிப்பாக உத்திரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த நிலையை பார்த்து ஆக்சிஜன் பெறுவதற்கு எல்லா நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு தூதர்களை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் 40 நாடுகள், இந்தியாவுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக சம்பந்தப்பட்ட தூதர்கள் தெரிவித்ததாக ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கி உதவியதன் பலனாக மேலும் பல நாடுகள் இப்போது இந்தியாவுக்கு உதவ முன்வரும் என எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.