400 பொலிசார் 120 வாகனங்கள் ஒரு மில்லியன் பவுண்டுகள் நஷ்டம்... பின்னணியில் ஒரு யானைக்கூட்டம்: உலகின் கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி
சீனாவில் 400 பொலிசார், அவசர சேவை அலுவலர்கள், 120 வாகனங்கள், ட்ரோன்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள்... இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டம் சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள்! அவர்கள் புறப்பட்டது யாரோ கொள்ளையர்களை பிடிக்க என்று எண்ணிவிடவேண்டாம்.
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் ஒரு கூட்டம் யானைகள்! ஆம், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி, 16 ஆசிய யானைகள் சீனாவின் Xishuangbanna என்ற இடத்திலுள்ள இயற்கை சரணாலயத்தை விட்டுவிட்டு, Pu’er என்ற நகரத்தை நோக்கி புறப்பட்டுள்ளன.
ஒரு மாதம் ஆன நிலையில், இரண்டு யானைகள் குட்டி போட, ஒரு யானை மந்தையை விட்டு வெளியேற, யானைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் ஆகிறபோது, அவை Mojiang என்ற பகுதிக்கு வர, அங்கு ஓரிடத்தில் உணவு தானியங்கள் நொதிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றை சாப்பிட்டதில் போதை தலைக்கேறி இரண்டு யானைகள் அங்கேயே மட்டையாகிவிட, 15 யானைகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளன.
அவை Yuxi என்ற நகரத்தை அடைந்ததும்தான் தொடங்கியிருக்கிறது வேடிக்கை. ஆறு மணி நேரம் ஊரையே துவம்சம் செய்திருக்கின்றன அந்த 15 யானைகளும்... குப்பைத்தொட்டிகளை உடைத்து, சேமிப்பகங்களின் கதவுகளை மிதித்துத் தள்ளி, வீடுகளை நாசம் செய்து, ஊரையே நாசம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு தண்ணீர்க்குழாய் ஒரு யானையின் கண்ணில் பட்டிருக்கிறது.
அதையும் சாமர்த்தியமாக திறந்து, எல்லா யானைகளும் திருப்தியாக தண்ணீர் குடித்தபின், மொத்தம் அவை ஏற்படுத்திய நஷ்டத்தைக் கணக்கிட்டால், அது ஒரு மில்லியன் பவுண்டுகள்! 60 ஹெக்டேர் பயிர்கள் நாசம், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு ஓட்டம் என அத்தனை அராஜகத்துக்குப் பிறகும் அடங்காத யானைக்கூட்டம், Jinning மாவட்டத்துக்குள் நுழைய, அப்போதுதான் நிலைமை இன்னும் சீரியஸாகியிருக்கிறது.
8 மில்லியன் மக்கள் வாழும் மாகாண தலைநகரமான Kunming நோக்கி அவை நடைபோட, அப்போதுதான் நாம் முதலில் சொன்ன அந்த 400 பொலிசார், அவசர சேவை அலுவலர்கள், 120 வாகனங்கள், ட்ரோன்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள்... போராடும் மக்கள் என்றால் சும்மா அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் பொலிசார்.
ஆனால், யானைகளிடம் அதெல்லாம் செல்லுமா? 18 டன் மக்காச்சோளம், அன்னாசிப்பழங்கள் முதலான சுவையான விருந்தையே அவர்கள் ஏற்பாடு செய்து, செல்லமே, கண்ணே சாப்பிட்டு விட்டு காட்டுக்குள் போய்விடுங்கள் என கொஞ்ச, யானைகளும் மகிழ்ச்சியாக விருந்து சாப்பிட்டிருக்கின்றன.
ஆனாலும், அவை பயணத்தை நிறுத்தியபாடில்லை! நேற்று முன் தினம் விருந்துண்ட களைப்பில் யானைகள் சூப்பராக ஒரு தூக்கம் போடும் ஒரு அபூர்வ காட்சி ஒன்று கிடைத்தது.
அவற்றையே சுற்றி சுற்றி வரும் ட்ரோன்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடிக்க, உலகம் முழுவதும் இதே பேச்சுதான். சரி, விடயத்துக்கு வருவோம், என்ன நடந்தது, உணவு தேடி அலைந்தால் கூட, தங்கள் வாழிடத்தை விட்டு புலம்பெயராத குணம் கொண்ட யானைகள், ஏன் 300 மைல் தூரம் கடந்து வந்தன. யானைகளின் இந்த செயல்பாட்டுக்கான காரணம் யாருக்கும் புரியவில்லை.
Chen Mingyong என்னும் பேராசிரியர், கூட்டத்துக்கு புதிதாக ஒரு பெண் யானை தலைமையேற்றதால், அவளுக்கு போதுமான அனுபவம் இல்லாததால் தன் கூட்டத்தை தவறாக அவள் வழி நடத்தியிருக்கலாம் என்கிறார். லண்டன் உயிரியல் பூங்காவின் வனத்துறை நிபுணரான Becky Shu Chen என்பவர், 1980களிலிருந்து தொடங்கிய காடுகள் அழிப்பு காரணமாக யானைகள் மனிதர்கள் வாழும் இடம் நோக்கி நகரத் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.
வேறு சிலரோ, காடுகளில் வெறும் புல்லையும் இலைகளையும் மரப்பட்டைகளையும் தின்று சலித்துப்போன யானைகள், மனிதர்கள் விளைவிக்கும் சுவையான உணவுப்பயிர்களால் ஈர்க்கப்பட்டு காடுகளை விட்டு ஊருக்குள் வரத்தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள்.என்றாலும், யாராலும் இந்த யானை பயணத்திற்கான சரியான காரணத்தைக் கூற முடியவில்லை என்பதுதான் உண்மை.