தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல்... வெல்லப்போவது யார்? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
இந்தியா மொத்தம் மிக எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாக உள்ளது.
வாக்கு எண்ணிக்கை
மே 4, 2026 பகல் 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா? திமுக வரலாறு படைக்குமா?
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைத் தக்கவைப்பாரா? அல்லது பாஜக புதிய வரலாற்றைப் படைக்குமா? கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி மூன்றாவது முறையாகத் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஒருவித ஆர்வத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், ஒரே ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் முதன்முதலில் களம் இறங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 98 முதல் 120 இடங்களை வாரிக் குவித்து மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் முன்பை விட மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஆட்சி மாற்றம்
சாணக்யா ஸ்டரேட்டஜிஸ் மற்றும் பி-மார்க் போன்ற கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் பாஜக 146 முதல் 175 இடங்களைப் பிடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளன.
அதேவேளை, பீப்பிள்ஸ் பல்ஸ் அமைப்பு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 178 முதல் 187 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறுகிறது.
கேரளாவில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றே பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 70 முதல் 75 இடங்களைப் பிடித்து முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருப்பதால் அது அப்படியே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 88 முதல் 101 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே நம்பப்படுகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |