பசியால் உயிரிழந்த 5 வயது சிறுவன்? வழக்கில் திடீர் திருப்பங்கள்- அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது
தமிழகத்தில் பசியால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டு பேர் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
விழுப்புரத்தின் மேல்தெரு என்ற பகுதியில் இருந்த தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கு பதிவு செய்த விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
எதனால் இந்த சிறுவன் கொலை செய்யப்பட்டான்? யார் காரணம்? என்ற பல கோணங்களில் போலீசாரின் விசாரணை தொடர்ந்தது.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில், சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை என்றும் தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், அதில் 2 சிசிடிவி காட்சிகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதன்படி, அந்த 2 சிசிடிவி காட்சியிலும் “2 இடங்களில் 2 நபர்கள் நடந்து செல்கின்றனர். அதில் ஒரு நபர், ஒரு சிறுவனைச் சுமந்து வரும் காட்சியும், அதன் பிறகு அவர் கையில் ஒரு கை தடியோ அல்லது இரும்பு பைப்பையோ தூக்கி வரும் காட்சியும்” அதில் இடம் பெற்று இருக்கிறது.
அதே போல் மற்றொரு சிசிடிவி காட்சியில், “குழந்தை உடல் மீட்கப்பட்ட இடத்தில் சிறுவனை அவர்கள் தூக்கி வருகின்ற அந்த காட்சியும்” இடம் பெற்றிருக்கிறது.
மிக முக்கியமாக, “சிறுவனைத் தூக்கி வரும் 2 பேரும் வட மாநிலத்தவர்கள் போன்று இருப்பதால், அவர்கள் குழந்தையைக் கடத்தி வந்து சாலையோரங்களில் பிச்சை எடுக்க வைத்து இருக்கக்கூடும்” என்றும், சந்தேகம் எழுந்து உள்ளது.
இதுதொடர்பாக ஒருவரை பிடித்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், சிறுவனின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும் நிலையில் பல உண்மைகள் வெளியே வரலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.