பிரித்தானியர்களை பாதுக்காப்பாக வெளியேற்ற ஆப்கானிஸ்தான் செல்லும் பிரித்தானிய படை!
பிரித்தானிய படையைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் பென் வாலெஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தாலிபான் படையினர் கைப்பற்றி விட்டனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரை தாலிபான் கைப்பற்றினர். இன்னும் சில நாட்களில் ஆப்கான் தலைநகர் காபூலை அவர்கள் எளிதில் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களில் அவர்கள் கைப்பற்றி உள்ள 6 முக்கிய நகரங்களில் இருக்கும் சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இத்தகைய சூழல் நிலவி வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானில் இருக்கும் நக்கல் நாட்டில் மக்களை விரைவில் நாடு திரும்புமாறு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆறிவுறுத்தியது.
இருப்பினும் அங்கு இன்னும் 4,000-க்கும் அதிகமான பிரித்தானிய குடிமக்கள் அங்கேயே சிக்கிக்கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்களை பத்திரமாக நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்காக தற்போது 600 பிரித்தானிய பாதுகாப்பு படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பென் வாலெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய குடிமக்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஆப்கான் அலுவலர்கள் ஆகியோரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் தற்போதைய முதல் கடமை என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத சூழலில், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவில் அதிபர் ஜோ பைடன் உள்ளார். அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது.