கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட 7 வயது பிரித்தானிய சிறுமி: தேடும் பணியில் பின்னடைவு
மொராக்கோவில் பிரித்தானிய சிறுமி ஒருவர் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை தேடும் பணியில் பின்னடைவு
மொராக்கோவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமி இனாயா மக்டா(Inaayah Makda) அலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
பிரித்தானியாவின் லங்காஷயரின் பிளாக்பர்ன் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இனாயா மக்டா, புதன்கிழமை மொராக்கோவின் காசாபிளான்கா கடற்கரையில் பாறை மீது அமர்ந்திருந்த போது பிரமாண்ட அலை அடித்து கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியை பத்திரமாக மீட்கும் முயற்சியில் சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து அப்பகுதி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அட்னான் ஹூசைன் ஈடுபட்டு வருகிறார்.
மீட்பு பணியில் தாமதம்
கடுமையான சூழ்நிலைகள் இருப்பினும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அட்னான் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அப்பகுதியில் வீசி வரும் கடுமையான புயல் காரணமாக தேடுதல் பணியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இனாயாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாட்டின் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மொராக்கோ தூதுவர் உறுதியளித்துள்ளார்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய ஆறுதலும் உடனுக்குடன் தகவலும் வழங்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |