கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர்! இறந்தவரின் செல்போனுக்கு வந்த செய்தி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் செல்போனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உயிரிழந்தவருக்கு தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி உயிரிழந்தார்.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ராஜப்பா கொரோனா காரணமாக இறந்ததாகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதியன்று அவருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் 70 வயது மதிக்கத்தக்க அவருக்கு இந்த மாதம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தபோது தடுப்பூசி செலுத்தியவர் தவறாக மொபைல் எண்ணை கொடுத்து இருக்கலாம் என்றும் இந்த தவறு கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.