இரு பெண்களின் சண்டையால் எட்டு மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் இரண்டு பெண்கள் சண்டையிட்டதில் எட்டு மாத குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் ராஜர்ஹத் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷானாஸ் காதுன்(22) என்ற பெண்ணுக்கும், யாஸ்மினா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஷானாஸின் எட்டு மாத குழந்தையை அவரது கையில் இருந்து யாஸ்மினாவுடன் சேர்த்து நான்கு பேர் பறித்துள்ளனர். அவர்கள் கோபத்தில் அந்த குழந்தையை தரையில் தூக்கி எறிந்துள்ளனர்.
இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுயநினைவின்றி இருந்த குழந்தையை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையின் நிலையை பார்த்த மருத்துவர்கள் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை குழந்தை உயிரிழந்தது.
அதனைத் தொடர்ந்து ஷானாஸ் அளித்த புகாரின் பேரில் யாஸ்மினா, சாந்தினி உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர். இதுகுறித்து பேசிய குழந்தையின் தாயார் ஷானாஸ்,
'மாமனார்-மாமியார் இடையே சண்டை நடந்ததை அடுத்து அங்கு சென்றோம். அப்போது யாஸ்மினாவும், சாந்தினியும் என் குழந்தையை கொன்று விட்டார்கள். எங்களுக்கு நீதி வேண்டும்' என தெரிவித்தார். பெண்களுக்கிடையேயான சண்டையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.