80வது பிறந்தநாளை கொண்டாட.. 2 மாதம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி லடாக் சென்ற சூப்பர் ஹீரோ தாத்தா
இந்தியாவில் 80 வயது முதியவர் ஒருவர் சைக்கிளிலேயே 2 மாதம் பயணம் செய்து லடாக் வரை சென்றுள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்(80). இவர் திருச்சூர் மெடிக்கல் கல்லூரியில் பிளம்பராக பணியாற்றியவர். இவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாட 2 மாதம் தொடர்ந்து சைக்கிளில் லடாக் வரை சென்றுள்ளார்.
இவரது பயணம் எதிர்பார்த்த அளவிற்கு எளிதாக அமையவில்லை. கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் திகதி அவரது இலக்கை அடைந்துள்ளார்.
சுமார் 2 மாதம் 4,500கிமீ சைக்கிள் ஓட்டிச்சென்று இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பயணத்தை பற்றி அவர் கூறியது, நான் 5வது வகுப்பு படிக்கும் போது சைக்கிள் ஓட்ட தொடங்கினேன்.
சைக்கிள் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நீண்ட தூரம் சைக்கிளில் பயணிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறிவிட்டது.
இந்த சாதனையை எனது பிள்ளைகள் எனக்கு உறுதுணையாக இருந்ததால் மட்டுமே நான் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்று பெருமையாக கூறினார்.