சுருண்டு விழுந்து இறந்த 9ஆம் வகுப்பு மாணவன்! தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் நேர்ந்த விபரீதம்
வகுப்பறையில் சத்தமிட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர் மைதானத்தைச் சுற்றி 4 முறை ஓடுமாறு தண்டனை கொடுத்துள்ளார்
தன்னால் ஓட முடியவில்லை எனக் கூறிய மோகன்ராஜ் கட்டாயப்படுத்தப்பட்டதில் சுருண்டு விழுந்துள்ளார்
தமிழக மாவட்டம் வேலூரில் மைதானத்தைச் சுற்றி ஓடியதால் 9ஆம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மோகன்ராஜ். அணைக்கட்டில் உள்ள அரசு பள்ளியில் மோகன்ராஜ் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று வழக்கம்போல் மாணவர் மோகன்ராஜ் பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய வேளையில் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால், மாணவர்கள் கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், சத்தமிட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தண்டனை அளிக்க, பள்ளி மைதானத்தை 4 முறை சுற்றி ஓடி வருமாறு கூறியுள்ளார்.
மாணவர்களும் மைதானத்தை சுற்றி ஓடிய நிலையில், மோகன்ராஜ் தன்னால் இதற்கு மேல் ஓட முடியாது என்று கூறியுள்ளார். மோகன்ராஜுக்கு மூச்சிறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தலைமை ஆசிரியர் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
மாணவரின் வார்த்தையை கேட்காத அவர், கண்டிப்பாக 4 முறை சுற்றி வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் தொடர்ந்து ஓடிய மோகன்ராஜ் திடீரென சுருண்டு விழுந்திருக்கிறார்.
இதனைக் கண்டு பதறிப் போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவரை மீது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே மாணவர் உயிரிழந்துள்ளார். அங்கிருந்த மோகன்ராஜின் பெற்றோர் தங்கள் மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மாணவரின் உடலைக் கேட்டபோது அவரது பெற்றோர் தர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை நடந்தால் மட்டுமே மாணவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மைதானத்தைச் சுற்றி ஓடிய மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.