கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் குடும்பத்துக்கு நல்ல உணவு கொடுக்கமுடியாது: கவலைப்படும் பிரித்தானியர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில், பண்டிகை நாளில் கூட குடும்பத்துக்கு நல்ல உணவு கொடுக்கமுடியாது என பிரித்தானியர்கள் கவலைப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானியர்களின் கவலை
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் கூட குடும்பத்துக்கு நல்ல உணவு கொடுக்கமுடியாது என மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானியர்கள் கவலைப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சால்வேஷன் ஆர்மி என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு கிறிஸ்துமஸ் உணவுக்கு ஆகும் செலவு 7.50 பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, அக்டோபர் மாதம் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தற்போதைய விலைப்படி இந்த செலவு இன்னமும் அதிகரித்திருக்கலாம்.
மக்கள் கவலை
பிரித்தனியர்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 சதவிகிதம் பேரும், கிழக்கு இங்கிலாந்தில் மட்டும் 80 சதவிகிதம் பேரும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் குடும்பத்துக்கு நல்ல உணவு கொடுக்கமுடியாது என கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
16 சதவிகிதம் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் உணவு வங்கிகளை நாட முடிவு செய்துள்ளார்களாம். 38 சதவிகிதம் பேர், திடீர் செலவு ஏதாவது ஏற்பட்டால் உணவையே தியாகம் செய்ய நேரிடலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்களாம்.
சால்வேஷன் ஆர்மியைச் சேர்ந்த Lieutenant Colonel Dean Pallant என்பவர் கூறும்போது, கிறிஸ்துமஸ் என்பது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டம், அது கவலைப்படும் நேரம் அல்ல என்கிறார்.
இன்னொரு பக்கம், 14 சதவிகிதம் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்க இயலாது என்று கூறியுள்ளதாகவும், 18 சதவிகிதம் பேர், தங்களை சற்று வெப்பப்படுத்திக்கொள்வதற்காக இலவச அனுமதி அளிக்கப்படும் கட்டிடம் ஒன்றில் நேரத்தை செலவிட திட்டம் வைத்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.