ஜேர்மன் வீராங்கனையை சட்டையைப் பிடித்து உலுக்கி பளார் பளாரென அறைந்த பயிற்சியாளர்: ஒலிம்பிக்கில் ஒரு திடுக் சம்பவம்
ஒலிம்பிக் போட்டிகளின்போது, ஜூடோ போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்த ஜேர்மன் வீராங்கனையை, அவரது பயிற்சியாளர் சட்டையைப் பிடித்து உலுக்கு உலுக்கென்று உலுக்கி, பளார் பளாரென அறைய ஒரு கணம் அரங்கத்திலிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஜேர்மன் ஜூடோ வீராங்கனையான Martyna Trajdos, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Szofi Ozbasஐ எதிர்கொள்வதற்காக போட்டி நடக்கும் மேடையை நோக்கிச் செல்கிறார்.
திடீரென Martyna நிற்க, அவரது பயிற்சியாளரான Claudiu Pusa, Martynaவை சட்டையைப் பிடித்து உலுக்கி, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைகிறார். அரங்கமே அதிர்ந்துபோய் அமைதியாக, Martynaவோ மௌனமாக தலையை ஆட்டிவிட்டு போட்டிக்கு செல்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக Martyna போட்டியில் தோற்றுப்போனார். பொதுவாக தோற்றுப்போனவர்களைக் குறித்து மக்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனால், Martyna அடி வாங்கியதால் சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்துள்ளார்கள்.
இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு Martyna விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஜேர்மனியில் இது ஒரு பாரம்பரியமாம், ஜூடோ போட்டிக்கு செல்வதற்கு முன் போட்டியாளரை உற்சாகப்படுத்துவதற்காக இப்படி செய்வார்களாம்.
ஆகவே, மக்களே என் பயிற்சியாளரை கோபித்துக்கொள்ளாதீர்கள். நான் தான் அவரை அப்படி செய்யச் சொன்னேன் என்று சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார் Martyna.