18ம் வயதில் கைக்குழந்தையுடன் தெருவில்... 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்
கணவன் மற்றும் சொந்த குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, 6 மாத குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலம் காஞ்ஞிரம்குளம் பகுதியில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, குடும்பத்தினரின் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் நண்பருடன் வாழ்க்கையை தொடங்கினார் ஆனி சிவா.
ஆனால் குழந்தை பிறந்த 6 மாதத்தில் அந்த உறவும் பிரிவை சந்திக்க, கைக்குழந்தையுடன் சொந்த குடியிருப்புக்கு திரும்ப, பெற்றோர் தங்களால் ஏற்க முடியாது என மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் பாட்டியின் குடியிருப்புக்கு அருகே, தனக்கான குடில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, தனது மகனுடன் வாழத் தொடங்கினார்.
தொடர்ந்து அவர் மசாலா தூள் மற்றும் சோப்பு உள்ளிட்டவைகளை தயாரித்து வீடுகளில் சென்று விற்றார், காப்பீட்டு முகவராக பணிபுரிந்தார், வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி வழங்கி உதவினார்.
இதனிடையே சமூகவியலில் பட்டப்படிப்பை முடிக்கவும் செய்தார். மகன் சிவ சூரியாவுக்காக ஆண்கள் போல முடி திருத்திக் கொண்டார், மகனுக்கு தந்தையும் சகோதரனுமானார்.
2014ல் நண்பர் ஒருவரின் கட்டாயத்தின் பேரில் பெண்கள் எஸ்ஐ தேர்வில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
தேர்வெழுதி 2016ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து 2019ல் மீண்டும் எஸ்.ஐ பதவிக்கான தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றார். 2021 ஜூன் மாதம் ஆனி சிவா வர்க்கலா பகுதியில் பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் வயிற்றுப்பிழைப்புக்காக இதே பகுதியில் உள்ள கோவில்களில் ஐஸ்கிரீம் மற்றும் எலுமிச்சைப் பழ ஜூஸ் விற்ற அதே இடத்தில் தாம் பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளது பெருமையாக இருப்பதாக ஆனி சிவா குறிப்பிட்டுள்ளார்.