பிரித்தானியாவில் 16 -17 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி எப்போது போடப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 16 மற்றும் 17 வயதினருக்கான தடுப்பூசி இன்னும் சில வாரங்களுக்குள் போட துவங்கிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தடுப்பூசி நிபுணர்களின் பரிந்துரையின் பின்னர், பிரித்தானியாவில் உள்ள 16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி போடப்படுவது இன்னும் சில வாரங்களுக்குள் துவங்கிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்கு பெற்றோரின் அனுமதி தேவையில்லை. அதே சமயம் அவர்களுக்கு Pfizer-BioNTech jab தடுப்பூசி போடப்படும் என்று தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக்குழு இன்று தெரிவித்துள்ளது.
அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி எப்போது போடப்படும் என்பது குறித்த பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்கள் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்களாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Jonathan Van-Tam கூறுகையில், தடுப்பூசிகள் நம்மிடம் நிறைய உள்ளன. எங்களிடம் தேவையான சப்ளை உள்ளது.
எனவே மிகக் குறைந்த வாரங்களில் இதற்கான பணிகள் துவங்கிவிடும் என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும், அவர் நேரத்தை வீணடிக்காமல், குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட்டு, அவர்கள் கல்லூரிக்கு திரும்பும் வகையில் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இப்போது வரை, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சில உடல்நலக் கோளாறுகள் இருந்தால், 18 வயதை நெருங்கியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரித்தானியாவில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி Pfizer-BioNTech என்பது குறிப்பிடத்தக்கது.