கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் தமிழக அரசிற்கு அளித்தது ரூ 2.5 கோடியா? 25 லட்சமா?
கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசிற்கு நடிகர் அஜித் 2.5 கோடி ரூபாய் அளித்துள்ளார் என அரசாணை வெளியான நிலையில், அஜித் ரூ.25 லட்சம் வழங்கியதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 13-05-2021 அன்று கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வேண்டுகோள் விடுத்து, ‘உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்’! என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் காணொலி வெளியிட்டார்.
அதேசமயம், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறக்கட்டளை தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை வழங்கினர்.
இந்நிலையில், நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசிற்கு 2.5 கோடி ரூபாய் அளித்துள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், நடிகர் அஜித் வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ 25 லட்சம் அளித்ததாக மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Shri Ajith kumar had donated twenty five lakhs to the Chief minister relief fund today via bank transfer.
— Suresh Chandra (@SureshChandraa) May 14, 2021
அஜித் நிதி அளித்தது தொகை தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல் வெளியானதால், எது உண்மை என உறுதிப்படுத்த முடியாத குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து, தற்போது தமிழக அரசு திருத்தப்பட்ட அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் அஜித் 25 லட்ச ரூபாய் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.