தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்! சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர்- பிரபல நடிகர் ஆதரவு
தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பிரபல நடிகரான சண்முகராஜா களமிறங்கியுள்ளார்.
கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது.
இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்ட பாபா, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சண்முகராஜா, எனது குரு சிவசங்கர் பாபா. நான் ஆறு வருடமாக சித்தர் வழிபாட்டில் இருக்கேன். கடந்த நான்கு வருடங்களாக சிவசங்கர் பாபாவுடன் இருக்கிறேன்.
அவர் குறித்து இதுவரையில் ஏழு நூல்கள் தொகுத்துள்ளேன். அப்துல் ரகுமானின் மாணவர் பாபா. கடந்த 20 தினங்களாக பாபா பாலியல் குற்றவாளி என்று நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளன.
ஆனால், அதில் ஒருதுளி கூட உண்மை கிடையாது. இது முற்றிலும் பொய் குற்றச்சாட்டு. இந்த பொய் குற்றச்சாட்டுக்கு காரணம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் என்ற இருவரும்தான்.
மண் சார்ந்த சித்த வழிபாட்டை முன்னெடுப்பவர் பாபா. அவர், சாதி, மதம் கிடையாது. பெண்கள் மீது எந்த நாட்டமும் கிடையாது. நிறையப் பெண்களை மரியாதையுடன் நடத்தி படிக்கவைத்துள்ளார்.
அவருக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர். இந்த விவகாரத்தால் பாபாவின் சீடர்கள் 50 லட்சம் பேர் மன உளைச்சலில் உள்ளோம். பாபாவுக்கு ஆதரவாக இனிமேல் ஏராளமானோர் கருத்து பதிவு செய்வோம்.
நேர்மையான ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது, பள்ளி நிர்வாகம் தான் முறையான விளக்கம் அளிக்க வேண்டும், என அவர்களை முறையான அறிக்கை விடக்கோரி போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.