சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை!
நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் அவருக்கு தனி நீதிபதி விதித்த ரூ.1 லட்சம் அபராதத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்று முன்னர் தொடங்கியது.
அப்போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை.அதை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்.
ஆனால் நடிகர் விஜய் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும். அபராத தொகையையும் ரத்து செய்யவேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை நீதிபதி பயன்படுத்தியுள்ளார்; கடுமையான வார்த்தைகள் மூல தேசவிரோதி போல சித்தரித்தது அவசியமற்றது எனவும் மற்ற குடிமக்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது எனவும் விஜய் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த ரூ.1 லட்சம் அபராதத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதோடு நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மேலும் நுழைவு வரி பாக்கி 80 சதவீதத்தை 1 வாரத்தில் செலுத்த வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.