ஜேர்மனியின் புதிய குடியிருப்பு உரிமை சட்டங்கள் அமுலுக்கு வந்தன: புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்புகள்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் குடியிருப்பு உரிமை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் சட்டப்படி வாழ்வதையும், ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதையும் எளிதாக்க உதவும் பிற சட்டங்களும் நேற்று, அதாவது 2023, ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.
ஜேர்மனியின் குடியிருப்பு உரிமை சட்டம்
இந்த புதிய சட்டம், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30ஆம் திகதி கெசட்டில் வெளியிடப்பட்டது. அதனால், tolerates status என்னும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று ஜேர்மனியில் வாழும் 140,000 வெளிநாட்டவர்கள் 18 மாத குடியிருப்பு அனுமதி பெற வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உள்துறை அமைக்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2022 அக்டோபர் 31 நிலவரப்படி ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகளாக ஜேர்மன் சட்டங்களுக்குட்பட்டு வாழ்ந்துவருவோர், எந்த தீவிர குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில், இந்த சட்டத்தால் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த பெடரல் உள்துறை அமைச்சரான Nancy Faeser, ஜேர்மனி, ஜேர்மன் சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களை கொடுப்பதன்மூலம் புலம்பெயர்தல் கொள்கையின் நோக்கத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க இந்த சட்டம் வகைசெய்கிறது என்றார்.
image - Draghicich | Dreamstime.com
அமுலுக்கு வரும் பிற சட்டங்கள்
மேலும், ஜனவரி 1ஆம் திகதியன்றே, சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து வாழும் 27 வயதும் அதற்குக் குறைவான வயதுடையவர்களுமாகிய இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனியில் தங்கியிருக்க வாய்ப்பு அளிக்கும் விதியும் அமுலுக்கு வருகிறது.
அத்துடன், இனி திறன்மிகுப்பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும், ஜேர்மன் மொழி அறிவு சான்றிதழ் தேவை என்னும் கட்டாயம் இல்லாமலே, ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள இயலும்.
இதுபோக, புகலிடக்கோரிக்கையாளர்கள், அவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போது ஜேர்மனிக்கு வந்திருந்தாலும் சரி, அவர்கள் ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் மொழிப் பயிற்சி வகுப்புகளில் இணைவதையும் பெடரல் அரசு சாத்தியமாக்குகிறது.
அதே நேரத்தில், குற்றப்பின்னணி கொண்டவர்க வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை கடுமையாக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.