ஜேர்மனியில் முக்கியமான மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு: குழந்தைகளுக்கு சிக்கல்...
காய்ச்சலோ உடல் வலியோ வந்தால் உடனடியாக மக்கள் தேடி ஓடுவது பாராசிட்டமால் மாத்திரைகளைத்தான்...
நம் நாட்டில் என்று இல்லை, உலகம் முழுவதுமே இப்படித்தான்!
பெரியவர்கள் பாராசிட்டமால் மாத்திரைகள் போடுவார்கள். குழந்தைகளுக்கு மாத்திரைகள் விழுங்குவது கடினம் என்பதால், அவை ஜூஸ் வடிவில் கொடுக்கப்படும்.
தற்போது ஜேர்மனியில் இந்த ஜூஸ் வடிவிலான பாராசிட்டமால் மற்றும் இபுப்ரூபன் என்னும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம்.
பொதுவாக இந்த காலகட்டத்தில் சுமார் 10 மில்லியன் போத்தல்கள் பாராசிட்டமால் மருந்து கடைகளில் கையிருப்பில் இருக்குமாம். இப்போதோ, மருந்துகடைகளில் ஷெல்ப்கள் காலியாகத் துவங்கியுள்ளனவாம். இப்போதே இந்த நிலைமை என்றால், குளிர்காலத்தில் குழந்தைகள் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலை வரலாம்.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் வாக்களித்ததுபோல ஆர்டர்களை பூர்த்தி செய்யவில்லை. மருந்து தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பது கஷ்டமாக இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.
கோவிட் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டபின், பல குழந்தைகளுக்கு ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பெற்றோர் மருந்துகளை வாங்கிக் குவித்துவிட்டார்கள்.
மேலும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பணியாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இது போதாதென்று, காப்பீட்டு நிறுவனங்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் என்ன தொகை வழங்கினவோ அதே தொகையைத்தான் இப்போதும் வழங்குகின்றன. ஆகவே, குழந்தைகளுக்கான மருந்து தயாரிப்பதில் மருந்து நிறுவனங்களுக்கு இலாபம் இல்லையாம்.
ஆக, குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில், இந்த பாராசிட்டமால் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், அரசு ஏதாவது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்போதைக்கு குழந்தைகளுக்கு சிக்கல்தான் என்றே தோன்றுகிறது.