தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.
கரூர்கூட்ட நெரிசல் உயிரிழப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின், கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்திருந்துள்ளனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும், கூட்டத்தில் கல் வீச்சு நடைபெற்றது, திட்டமிடப்பட்ட சதி என தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக கேட்ட இடத்தை விட குறுகலான இடத்தில் காவல்துறை அனுமதி வழங்கியது, போதிய காவல்துறையினர் இல்லை என சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்வு குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.
ஏடிஜிபி விளக்கம்
இது தொடர்பாக பேசிய அவர், "கடந்த 23 ஆம் திகதி தவெக தரப்பில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் கூட்டத்திற்கு அனுமதி கோரி கடிதம் வழங்கினர். அந்த இடம் ஆபத்தானது ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மறுபக்கம் அமராவதி ஆறு மற்றும் பாலம் இருப்பதால், பெரிய கூட்டத்தை நடத்த முடியாது என விளக்கினோம்.
அடுத்ததாக உழவர் சந்தை பகுதியில் அனுமதி கேட்டார்கள். அது குறுகலான இடம் என்பதால் அனுமதி வழங்க மறுத்தோம்.
அண்மையில் மற்றொரு கட்சி 10,000 முதல் 15,000 பேர் வரை கூட்டி கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதனை ஏற்றுக் கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி பெற்றனர்.
பிரச்சாரத்தின் போது கல்வீச்சு சம்பவம் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. 10,000 பேர் என்று கூறியிருந்தாலும், 27,000-க்கும் மேற்பட்டோர் கூடினர்.
நேற்று, விஜய் வந்தபோது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்கு முந்தைய நாள் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது 137 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று 500 காவலர்கள் பணியில் இருந்தும், சம்பவத்துக்குப்பின் காயம்பட்டவர்கள் இருந்த ஆம்புலன்ஸையே எங்களால் வெளியே கொண்டு வரமுடியவில்லை. தவெக தலைவரையேகூட, அந்த இடத்திலிருந்து எங்களால் விரைந்து அப்புறப்படுத்த முடியவில்லை.
என்னதான் காவலர்கள் பணியில் இருந்தாலும், களத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் தேவை. அது இல்லையென்றால், 1,000 - 2,000 காவலர்கள் போட்டாலும் 15,000 -16,000 பேர் உள்ள கூட்டத்தை என்ன செய்ய முடியும்?
கரூர் ரவுண்டானாவிற்கு விஜய் வரும் போதே 6 மணி ஆகிவிட்டது. கூட்டம் அதிகம் உள்ளதால், 50 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்தமாறு காவல்துறை அறிவுறுத்தியது. ஆனால் தவெக தரப்பு மறுத்து விட்டது.
விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |