லுங்கி மாத்தக் கூட அனுமதிக்காமல் கைது செய்தனர்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி பரபரப்பு பேட்டி
திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி அதிமுகவினர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது.
அந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு இரவு 8 மணிக்கு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த ஜெயக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி,
வீட்டின் உள்ளே சாப்பிட்டுகொண்டிருந்தபோது, 30, 40 போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் வந்தனர். லுங்கி அணிந்திருந்ததால் உடை மாற்றிவிட்டு வருகிறேன் என்று அவர்( ஜெயக்குமார்) கூறியபோது, அதற்கு அனுமதி அளிக்காமல் லுங்கியோடுதான் நீ வரவேண்டும் என போலீசார்பிடித்து இழுத்து சென்றனர்.
அவர் மீது முதலமைச்சருக்கு என்ன தனிப்பட்ட கோவம் என்று தெரியவில்லை. பழி வாங்கும் நடவடிக்கையாக இதை பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.