உடனடியாக புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்துங்கள்... ஜேர்மன் அரசுக்கு ஆலோசனைக்குழு வலியுறுத்தல்
Omicron வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள, ஜேர்மனியில் உடனடியாக புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவேண்டும் என அரசின் ஆலோசனைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மருத்துவமனைகள், பாதுகாப்பு அமைப்பு, சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆலோசனைக்குழுவிலுள்ள நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் வாயிலாக எச்சரித்துள்ளார்கள்.
ஏற்கனவே பரவிவருவதைப்போல தொடர்ந்து Omicron வகை கொரோனா வைரஸ் பரவுமானால், ஜேர்மன் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் நோய்வாய்ப்படலாம், தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படலாம் என அந்த 19 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
முழுமையாக பொதுமுடக்கம் அறிவிக்கவேண்டும் என அந்த நிபுணர்கள் கூறாமல், மக்கள் மற்றவர்களை தொடர்பு கொள்வதை வரும் சில நாட்களுக்குள் கடுமையாக கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
Omicron வைரஸ், கொள்ளைநோய்க்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்துள்ளது, ஏனென்றால், அது குறுகிய காலகட்டத்தில் பலரை பாதிப்பதுடன், ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களையும், தடுப்பூசி பெற்றவர்களையும்கூட பாதிக்கிறது என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
அத்துடன், இந்த Omicron வகை கொரோனா வைரஸ் இரண்டு முதல் நான்கு நாட்களில் இரண்டு மடங்காக அதிகரிப்பதால் பயங்கரமாக பரவலாம் என அவர்கள் கணித்துள்ளார்கள்.