என் பிள்ளையை காப்பாற்றுங்கள்... பிரித்தானிய அமைச்சர்களை கெஞ்சும் 19 வயது காபூல் தாயார்
ஐ.எஸ் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த 23 மாத குழந்தையை மீட்டுவர உதவ வேண்டும் என ஆப்கன் இளம் தாயார் ஒருவர் பிரித்தானிய அமைச்சர்களை கெஞ்சியுள்ளார்.
காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 19 வயதான Basbibi என்பவரின் 23 மாத மகனும் ஒருவர். வெடிகுண்டு தாக்குதலில் கணவன் மற்றும் குழந்தையின் பிரித்தானிய தாத்தா ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது காபூல் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பிஞ்சு மகனை காப்பாற்ற வேண்டும் என Basbibi பிரித்தானிய அமைச்சர்களிடம் கெஞ்சியுள்ளார்.
Basbibi பிரித்தானியா திரும்ப விமானத்தில் ஏறச்சென்ற நிலையிலேயே, விமான நிலையத்திற்கு வெளியே இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள Basbibi, தமது பிள்ளையை மீட்டு வந்து உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
குண்டுவெடிப்பில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குழந்தை முகமது, தற்போது காபூல் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அந்த வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தாம் உயிர் தப்பியது கடவுளின் கருணை என குறிப்பிட்டுள்ள Basbibi, ஆனால் கணவரையும் உறவினர்களையும் இழந்துள்ளது வாழ்நாள் துயரமாகவே நீடிக்கும் என்றார்.
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து, பின்னர் மரணமடைந்த முகமதுவின் தாத்தா சுல்தான் 10 நாட்களுக்கு முன்னரே பிரித்தானிய குடியுரிமை பெற்றார். 2002ல் இருந்தே அவர் பிரித்தானியாவில் டாக்ஸி சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.
அவரது குடும்பத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, விமான நிலையம் அருகே காத்திருந்த போதே ஐ.எஸ் குழுவினரின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியுள்ளனர்.
இதனிடையே, வடக்கு லண்டனில் வசிக்கும் சக்ருல்லா, சுல்தானின் இன்னொரு மகன் தெரிவிக்கையில், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து காப்பாற்றி தனது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வர முயன்று தனது தந்தை உயிரைத் தியாகம் செய்ததாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குழந்தை முகமது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,
தற்போதைய சூழலில் விமான பயணத்திற்கு மருத்துவர்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும், குழந்தையின் உயிருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.