என் தாயை இழந்ததுபோல்... ராஜ குடும்பத்தினர் மீது இளவரசர் ஹரியின் பரபரப்பு புகார்
தன் தாய் திடீரென கொல்லப்பட்ட நிலையில், தான் மனோரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து பேசுவதைக்கூட தனது குடும்பம் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் இளவரசர் ஹரி.
அதேபோல், சமீபத்தில், தன் மனைவி மேகன் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டபோது தன் குடும்பத்திடம் உதவிகோர முயன்றதாகவும், தனக்கு அமைதியே பதிலாக கிடைத்ததாகவும், தான் அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஹரி.
The Me You Can’t See என்ற பெயரில் புதிதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் ஹரி, அந்த நிகழ்ச்சியில் அளித்த பேட்டியின்போது, எனது குடும்பம் எனக்கு உதவும் என்று எண்ணினேன், ஆனால், எனது ஒவ்வொரு கோரிக்கையும், விண்ணப்பமும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
எப்படியாவது எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம் என ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தோம், ஆனால் பலனேதும் இல்லை, மேகன் போராடிக்கொண்டிருந்தார்.
மேகன் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, எனக்கு என் தாய் டயானாவின் இறுதிநாட்கள்தான் நினைவுக்கு வந்தது என்று கூறும் ஹரி, வரலாறு திரும்பியது போல் இருந்தது, என் தாய் வெள்ளையரல்லாத ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் துரத்தியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார், இப்போதும் அதேதான் (மேகனுக்கும்) நடக்கிறது. என் வாழ்வில் இன்னொரு பெண்ணை இழக்க நான் விரும்பவில்லை என்கிறார் அவர்.
அந்த பேட்டிகளில், தன் தாயின் மரணம் காரணமாக தனக்கு ஏற்பட்ட துயரத்தைக் குறித்து பேசக்கூட முடியாத ஒரு நிலைமை, தாயை காப்பாற்றமுடியவில்லையே என்ற தோல்வி உணர்வு, அதைத் தொடர்ந்து போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் நாடியது, அரண்மனையில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு, மேகனுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டபோது, தன் குடும்பம் அவருக்கு உதவ மறுத்தது, இதிலிருந்தெல்லாம் வெளியேற மன நல சிகிச்சை தனக்கு எப்படி உதவியது என்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து மன்ம் திறந்து பேசியுள்ளார் ஹரி.