மீண்டும் ஐபிஎல் நடந்தால் எங்கள் நாட்டு வீரர்கள் விளையாடமாட்டார்கள்! CSK போன்ற அணிகளுக்கும் பெரும் அடி
இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடர் நடந்தால், இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. கொரோனா பரவலுக்கிடையே வெற்றிகரமாக இந்த தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்தது.
ஆனால் வீரர்கள் சிலருக்கு கொரோனா பரவியதால், தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்த தொடர் மீண்டும் வரும் செப்டம்பர் அல்லது அதற்கு பின் நடைபெறலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவில் இல்லாமல் மீண்டும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்து வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்று இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடர் மீண்டும் எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் அப்போட்டிகளை, செப்டம்பர் மாத இறுதியிலும் மற்றும் நவம்பர் மாத இடையிலும் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் இந்த காலப்பகுதியல் நடைபெற்றால் இங்கிலாந்து வீரர்கள் யாரும் அத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அப்போது இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
நாங்களும் எங்கள் வீரர்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதையே விரும்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் 11 பேர் ஒவ்வொரு அணிக்கு விளையாடி வருகின்றனர். குறிப்பாக சென்னை அணியில் சாம்கரன், மொயின் அலி மற்றும் ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோவ் போன்றோர் இருப்பதால், இவர்கள் இல்லாமல் இந்த அணி விளையாடினால், அவர்களுக்கு இது பெரும் பின்னடைவாகவே இருக்கும்.