லண்டனில் காணாமல் போன 20 வயது இளம்பெண்ணை தேடும் போது கிடைத்த உடல் பாகங்கள்! வெளியான முழு பின்னணி
லண்டனில் ஒரு மாதத்திற்கு மேல் காணாமல் போன 20 வயது பெண்ணை பொலிசார் தேடி வந்த நிலையில் பூங்காவில் உடல் பாகங்கள் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு லண்டனை சேர்ந்தவர் அக்னீஸ் அகோம் (20). இவர் கடந்த மே 9ஆம் திகதி காலை வீட்டில் இருந்து வெளியில் கிளம்பி சென்ற பின்னர் காணாமல் போயிருக்கிறார்.
அக்னீஸ் காணாமல் போனதாக அதே மாதம் 11ஆம் திகதி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த அக்னீஸ் கடந்த 3 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அக்னீஸை பொலிசார் தேடி வந்த சூழலில் உடல் பாகங்களை நீஸ்டன் ரீகிரியேஷ்ன் பூங்காவில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
தற்போது தடயவியல் துறையினரின் அறிக்கைக்காக பொலிசார் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே அக்னீஸ் காணாமல் போனது தொடர்பாக நெசுலை பைசன் (63) என்பவரை கடந்த மாதம் 18ஆம் திகதி பொலிசார் கைது செய்தனர், அவர் மீது அடுத்த சில நாட்களில் கொலை வழக்கும் பதியப்பட்டது.
அவர் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். அக்னீஸ் தொடர்பில் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் நீல் ஜான் கூறுகையில், உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சம்மந்தப்பட்ட அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அக்னஸின் குடும்பத்திற்கு சிறப்பு அதிகாரிகளால் தொடர்ந்து ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது.
எங்கள் குழுவும் தடயவியல் சகாக்களும் சில நாட்கள் நீஸ்டன் பூங்காவில் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.