இந்தியாவையே அதிரவைத்துள்ள ’அக்னிபாத் திட்டம்’! கொந்தளித்த இளைஞர்கள் தொடர் போராட்டம்
இந்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம் தொடர்பான அறிவிப்பு இந்தியாவையே அதிரவைத்துள்ளது. அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? அதன் அம்சங்கள்
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது.
இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.
மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் திறமை மிக்க அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்து துறையிலும் பணி முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் 4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரியும் வகையில் உள்ள அக்னிபத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன செய்வது என கோரி நாடு முழவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களாக பீகார் உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் டெல்லி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறை என்பது வெடித்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது போல நேற்று சென்னை போர் நினைவு சின்னம் அருகே 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு சென்னை காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து சந்திப்புகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறவேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கையில், இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள "அக்னிபாத்" திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த "அக்னிபத்" எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக கூறுகையில், அக்னிபத் விவகாரத்தில், கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும். கலவரம் நடக்கும் போது மத்திய அரசு அதை நிறுத்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இளம் வீரர்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ப்பதற்காக தான் பா.ஜ.க. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னிபாத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என சீமான் எச்சரித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னிபாத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்!https://t.co/ZmzEFLWtnq#Agnipath pic.twitter.com/5J7obzfArZ
— சீமான் (@SeemanOfficial) June 18, 2022