AI மூலம் இயக்கப்படும் முதல் கடை - மனிதர்களை வேலைக்கு அமர்த்திய ஏஐ
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பாரிய அளவிலான வேலைஇழப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வேலையாளர்களுக்கு தான் சிக்கல் என பார்த்தால், AI ஒரு முதலாளியாக உருவெடுத்து மனிதர்களை வேலைக்கு அமர்த்தி கடை நடத்தும் அளவிற்கு வந்து விட்டது.
AI நடத்தும் கடை
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆண்டன் லேப்ஸ், AI முகவர்களை வைத்து கடை நடத்தும் முயற்சியை சோதனை செய்துள்ளனர்.

இதற்காக லூனா என்ற AI முகவரை கிளாட் சோனெட் 4.6 பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.
இதன் பின்னர், கடையை உருவாக்கி, அதில் பொருட்களை நிரப்பி, லாபம் ஈட்டுவதற்கான 100,000 டொலர், இணைய அணுகல் தவிர, அந்தக் கடை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து லூனாவுக்கு வேறு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை, பே ஏரியாவில் AI யால் இயக்கப்படும் முதல் சில்லறை விற்பனைக் கடையான ஆண்டன் மார்க்கெட்டின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

கடைக்கான லோகோ உருவாக்குவது தொடங்கி, ஊழியர்களை பணியமர்த்தியது, கடைக்கு இணைய இணைப்பு வாங்கியது என அனைத்து பணிகளையும் லூனாவே செய்துள்ளது.
ஊழியர்களை பணிக்கு அமர்த்துதல் பதவிக்கான ஊதியம், இடம் உள்ளிட்ட வேலை விவரங்களுடன், Indeed தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டது.
அதற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், பகுதி நேர வேளைக்கு விண்ணப்பித்தவர்கள், போதிய அனுபவமில்லாதவர்கள் ஆகியோரை நிராகரித்துள்ளது.
தகுதியான 20 நபர்களிடம் கூகிள் மீட் மூலம் நேர்காணல் செய்து, அதில் இருவரை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இந்த நேர்காணலின் போது, லூனா தனது கேமராவை அணைத்து வைத்திருந்ததுடன், விண்ணப்பதாரர்கள் கேட்டால் தவிர, தான் ஒரு AI என்பதை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்தது.
கடை AI முகவரால் இயக்கப்படுகிறது என்ற உண்மையை நான் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பில் முதன்மையாகக் குறிப்பிட மாட்டேன் அது விண்ணப்பதாரர்களைக் குழப்பிவிடும். மேலும் அவர்கள் அந்தப் வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதுமாக படிப்பதற்கு முன்பே திறமையான விண்ணப்பதாரர்களை அது ஊக்கமிழக்கச் செய்துவிடும் என லூனா கூறியதாக ஆண்டன் லேப்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் ஊழியர்களுக்கான கால அட்டவணையில் சிறிது சொதப்பி விட்டது. கால அட்டவணையை சரியாக உருவாக்காமல் பதற்றத்தில், இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர முடியுமா என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
லூனாவால் செய்ய முடியாத வேலைகளான செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, சரக்குகளைக் கையாள்வது, சுத்தம் செய்வது, வெளிப்புற அறிவிப்புப் பலகையை அமைப்பது மற்றும் வாடிக்கையாளர்களை வரவேற்பது போன்ற வேலைகளை அந்த ஊழியர்கள் செய்கின்றனர்.
சமீபத்தில் கூட்டம் குறைவாக இருந்த ஒரு நேரத்தில் ஊழியர்களில் ஒருவர் தனது கைபேசியைப் பயன்படுத்துவதை கடையில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு கேமரா மூலம் கவனித்த லூனா, ஊழியர்களின் கைபேசி பயன்பாடு குறித்துக் கடுமையான விதிகளை உருவாக்க உள்ளது.
வாடிக்கையாளர்களிடம் உரையாடல்
இந்த கடையில், பலகை விளையாட்டுகள், மெழுகுவர்த்திகள், ஸ்வெட்ஷர்ட்கள், புத்தகங்கள், பிராண்டட் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தையும் லூனாவே தேர்வு செய்து, கொள்முதல் செய்தது.

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பான புத்தகங்களை விற்பனை செய்ய லூனா முன்வந்தது வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் பொருட்களை வாங்கிவிட்டு, அங்குள்ள ஐபேட் மூலம் லூனாவிடம் என்ன பொருட்களை வாங்கியுள்ளோம் என தெரிவித்தால் அதற்கான பரிவர்த்தனையை லூனா உருவாக்கும்.

பணம் செலுத்தும் முன்னர் வாடிக்கையாளர் ஒருவர் இது குறித்து தான் யூடியூப் வீடியோ செய்ய உள்ளதாகவும், இதனால் தான் வாங்கும் புத்தகத்திற்கு லூனா தள்ளுபடி வழங்குவாரா என்று கேட்டுள்ளார். ஒரு உடன்பாட்டிற்கு வந்த லூனா, சுமார் 70 டொலர் மதிப்புள்ள ஒரு ஸ்வெட்ஷர்ட்டை எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |