ஏர் இந்தியா விமான விபத்து: கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படும் விமான நிலைய ஊழியர்கள்
இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இந்தியாவின் அகமதாபாதில் விபத்துக்குள்ளான துயர சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட விமான நிலைய ஊழியர்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா விமான விபத்து
எதிர்காலம் குறித்த பல்வேறு திட்டங்கள், வித்தியாசமான உணர்வுகள், இலக்குகளுடன், இந்தியாவிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள், விமானப் பணிப்பெண்கள், பணியாளர்கள் என 241 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமான விபத்து பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இப்படி, விமானத்தில் பயணித்த 241 பேரின் உயிரை பலிவாங்கிய விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவேண்டிய கட்டாயம் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆகவே, அகமதாபாதிலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் பணிபுரியும், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளைக் கையாள்வது முதல், விமானத்தைப் பராமரிப்பது வரையிலான பணிகளைச் செய்யும், Ground handling staff என்னும் பணியாளர்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் காவல்துறை, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) தலைமையிலான விசாரணை நடத்தப்படுகிறது.
அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணர்களை அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து வந்து இணையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும், போயிங் நிறுவன ஊழியர்கள், அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் பிரித்தானியாவை மையமாகக் கொண்ட விமானப் போக்குவரத்துத்துறை நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |