மத்திய கிழக்கில் மோதல்- ஏர் பிரான்ஸ் விமான சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை முன்னிட்டு, பிரான்ஸ் தேசிய விமான சேவை நிறுவனமான Air France தனது பல்வேறு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதல்கள், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டிருப்பது காரணமாக, பல சர்வதேச விமானங்கள் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
“பயணிகள் மற்றும் விமான குழுவினரின் பாதுகாப்பே எங்கள் முதன்மை. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக, அந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துகிறோம்” என Air France அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா, அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளதால், ஐரோப்பா-ஆசியா இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் துருக்கி, எகிப்து, கிரீஸ் வழியாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, உலகளாவிய விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரமலான் மாதத்தை முன்னிட்டு மத்திய கிழக்கில் பயணிகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுத்தம் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய விமான நிறுவனங்கள், நிலைமை சீராகும் வரை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு விமான சேவைகளை குறைக்கவோ, நிறுத்தவோ திட்டமிட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |