ஏர் இந்தியா விமான விபத்தில் கணவரை இழந்த இந்தியப் பெண்: பயத்தில் மகன் கூறும் விடயம்
கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியான விடயத்தை நம்மில் பலரால் நிச்சயம் மறந்திருக்கமுடியாது.

அந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் அந்த சோகத்திலிருந்து இன்னமும் விடுபடாத நிலையில், அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
கணவரை இழந்த இந்தியப் பெண்
அந்த விமான விபத்தில் தன் கணவரையும், மாமியாரையும் இழந்தார் இரண்டு பிள்ளைகளின் தாயான பாவிகா பட்டேல் (38).

அந்த விபத்து ஒரு நொடியில் அனைத்தையும் வாரிக்கொண்டு போய் விட்டது என்று கூறும் பாவிகா, அந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டு ஆன நிலையில், தனக்கு நீதி வேண்டும் என்றும், என்ன நடந்தது, புறப்பட்ட உடனே விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை தான் அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்.
தன் கணவரான கேதன்குமார் பட்டேலுடன் (42) இணைந்து, கென்சிங்டனில் கடை ஒன்றை நடத்திவந்தார் பாவிகா.

தம்பதியருக்கு முறையே 11 மற்றும் 8 வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தந்தையை இழந்த அதிர்ச்சியில் பாவிகாவின் 8 வயது மகன் கவுன்சலிங் செல்லவேண்டிவந்ததாகவும், தன் மகன் மற்றும் மகள் குறித்து தான் கவலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

தன் மகனால் தனியாக வீட்டில் இருக்கமுடியவில்லை என்று கூறும் பாவிகா, வருவாய்க்காக நான் கடையில் வேலை செய்தே ஆகவேண்டும், அதே நேரத்தில், பயந்துபோயிருக்கும் பிள்ளையையும் தனியாக விடமுடியாது, தன்னால் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு இடங்களிலும் இருக்கமுடியும் என்கிறார்.
அதைவிட சோகம் என்னவென்றால், தன் கணவர் மற்றும் மாமியார் இறந்து ஓராண்டு ஆனதைக் குறிக்கும் மதச் சடங்குகளுக்காக தானும் தன் பிள்ளைகளும் இந்தியா செல்லவேண்டியுள்ளது என்று கூறும் பாவிகா, தன் மகன், ‘அம்மா, வேறு விமானத்தில் செல்லலாம், ஏர் இந்தியா விமானம் மட்டும் வேண்டாம்’ என பயத்துடன் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |