ஒரே நாளில் ரத்தான 200 விமானங்கள்: தவித்துப் போன ஆயிரக்கணக்கானோர்
அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரே நாளில் 200 விமானங்களை ரத்து செய்துள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அமெரிக்காவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் தேசிய அளவில் 30% விமான சேவையை திடீரென்று ரத்து செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 165 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திங்களன்று மட்டும் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் சான் ஜுவான், ஆர்லாண்டோ, மியாமி மற்றும் ஃபோர்ட் லாடர்டேல் நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்கள் மொத்தமாக ஸ்தம்பித்து போயுள்ளனர்.
பலரும் செய்வதறியாது தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் கொட்டியுள்ளனர். இதனிடையே, விமானிகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாலையே, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் விமான சேவையை ரத்து செய்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
ஆனால் குறித்த தகவலை முற்றாக மறுத்துள்ள ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் காலநிலை மற்றும் தொழில்நுட்ப சிக்கலே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உடனடியாக இந்த விவகாரம் குறித்து தீர்வு எட்டப்படும் என நிர்வாகம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் விமான சேவைகள் ரத்தாகியுள்ளதாகவும், ஆனால் பிரதான சேவைகள் அனைத்தும் செயலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.