மாணவர் கடன், வரி குறைப்பு, மருத்துவம்... அவுஸ்திரேலியா தேர்தலில் பிரதமர் அல்பானீஸ் அளிக்கும் வாக்குறிதி
மாணவர் கடனைக் குறைப்பதையும், முதல் வீடு வாங்குபவர்கள் அனைவருக்கும் உதவுவதையும் தனது மறுதேர்தல் வாக்குறுதிகளாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முன்வைத்துள்ளார்.
20 சதவீதம் வரையில்
அவுஸ்திரேலியாவில் நாளை பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. இதில் ஆளும் லேபர் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் லேபர் கட்சியின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு என்ன பலன் என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.
மாணவர் கடனை 20 சதவீதம் வரையில் குறைக்க பிரதமர் அல்பானீஸ் 16 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார், மேலும் முதல் வீடு வாங்குபவர்கள் அனைவரும் 5 சதவீத வைப்புத்தொகையுடன் கடன் பெறுவதை உறுதி செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஆனால் மாணவர்களுக்கான கடன் நிவாரணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து பரப்புரை மேற்கொண்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் பீற்றர் டட்டன். ஆனால் எரிபொருள் கலால் வரியை தற்காலிகமாக பாதியாகக் குறைக்கும் எதிர்க்கட்சியின் திட்டத்தை ஆளும் லேபர் கட்சி எதிர்க்கிறது.
இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கும் பொருட்டு மாணவர் கடனை 20 சதவீதம் வரையில் குறைக்க பிரதமர் அல்பானீஸ் 16 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார். மேலும், ஒவ்வொரு முதல் வீடு வாங்குபவரும், அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஐந்து சதவீத வைப்புத்தொகையுடன் புதிய வீடு வாங்க முடியும் என்பதை உறுதி செய்யும் திட்டம் ஒன்றையும் பிரதமர் அல்பானீஸ் அறிமுகம் செய்துள்ளார்.
ஜனவரி 2026 முதல், முதல் வீடு வாங்குபவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் தங்களுக்கு பிடித்தமான வீட்டை வாங்க முடியும். அதாவது முதல் வீடு வாங்குபவர் சிட்னியில் $1.5 மில்லியனுக்கு ஒரு வீட்டை வாங்க முடியும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவருக்கொருவர் வரி நிவாரணக் கொள்கைகளை எதிர்க்கின்றனர்.
மருத்துவ உதவி சேவை
ஜூலை முதல் ஒரு வருடத்திற்கு எரிபொருள் கலால் வரியை 25.4 cents என பாதியாகக் குறைக்கும் கூட்டணியின் 6 பில்லியன் டொலர் திட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று லேபர் கட்சி அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக, அல்பானீஸ் அரசாங்கம் 17 பில்லியன் டொலர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு 268 டொலர் வருமான வரி நிவாரணத்தை முன்மொழிகிறது.
ஜூலை 2026 முதல், 18,201 டொலர் முதல் 45,000 டொலர் வரை சம்பாதிப்பவர்களின் விளிம்பு வரி விகிதம் 16 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறையும். மட்டுமின்றி, வரி செலுத்துவோருக்கு 1000 டொலர் உடனடி வரி விலக்கு வழங்கப்படும்.
மேலும், பிரதமர் அல்பானீஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவ உதவி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும். ஜனவரி 1 முதல், குறிப்பிட்ட இலக்கத்தை தொடர்புகொள்ளும் அவுஸ்திரேலியர்கள் ஒரு பதிவுசெய்யப்பட்ட செவிலியருடன் இணைக்கப்படுவார்கள், அவர் ஆலோசனை வழங்கலாம் அல்லது வேறு சுகாதார சேவைக்கு அவர்களைப் பரிந்துரைக்கலாம்.
இது வருடத்திற்கு 250,000 அவுஸ்திரேலியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்வதைத் தடுக்கலாம். மேலும், மாகாண கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, முதல் வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே என 100,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு 10 பில்லியன் டொலர்களை செலவிட லேபர் கட்சி உறுதிபூண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |