நைஜர் நாட்டில் கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை
நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்
நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்
ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |