தனது கடைசி போட்டியில் 158 ரன் விளாசிய வீராங்கனை! இந்திய அணிக்கு 410 இலக்கு
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 409 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஹீலி சதம்
ஹோபர்ட்டில் இந்தியா, அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலிய அணியில் போபே லிட்ச்ஃபீல்ட் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அலிஸ்ஸா ஹீலி மற்றும் ஜார்ஜியா வோல் வலுவான கூட்டணி அமைத்தனர்.
அரைசதம் அடித்த ஜார்ஜியா வோல் (Georgia Voll) 52 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அலிஸ்ஸா ஹீலி (Alyssa Healy) ருத்ர தாண்டவம் ஆடினார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் ஹீலி சதம் விளாசினார்.

பெத் மூனி விளாசல்
அதன் பின்னரும் அதிரடியை தொடர்ந்த அவர், 98 பந்துகளில் 158 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 27 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பெத் மூனி (Beth Mooney) ஆட்டமிழக்காமல் 84 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் தரப்பில் ஸ்நேஹ் ராணா, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளும், ரேணுகா சிங், கஷ்வீ மற்றும் தீப்தி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |