ஒரேயடியாக 300கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: ஆத்திரத்தில் கொந்தளித்த பயணிகள்
அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் ஒரேயடியாக 303 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவத்தில் பயணிகள் கோபத்தை பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கன் விமான சேவை நிறுவனம் விமானிகள் பற்றாக்குறை, நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக சனி, ஞாயிறு நாட்களில் 303 விமானங்களை ரத்து செய்துள்ளது.
நீண்ட பல மாதங்களுக்கு பிறகு வார இறுதி நாட்களை கொண்டாட முடிவு செய்த மக்கள், இந்த திடீர் விமான ரத்து நடவடிக்கைகளால் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பலர் தங்கள் ஆத்திரத்தை சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்த்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 123 விமானங்கள் மேலே குறிப்பிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஞாற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 180 என அதிகரித்துள்ளது. மட்டுமின்றி திங்கட்கிழமையும் 98 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, ஜூலை இறுதி வரையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 3,000 விமானங்கள் வரையில் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஜூன் மாதத்தில் மட்டும் நாளுக்கு 50 முதல் 60 விமானங்கள் வரையில் ரத்து செய்ய வேண்டிய சூழல் இருப்பதாகவும் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் நாளுக்கு 80 விமானங்கள் வரையில் ரத்தாகலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் வரலாற்றில் முதன்முறையாக 2020ல் மொத்தமாக 35 பில்லியன் டொலர் தொகையை இழந்துள்ளது.
இதில், உலகில் விமான எண்ணிக்கை அதிகம் கொண்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத முதல் பாதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 950 விமானங்களை ஊழியர்கள் பற்றாக்குறையால் ரத்து செய்ய உள்ளது.
ஜூலை மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 3,000 தொடலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். பல ஊழியர்கள் வேலையை விட்டு நின்று போனதாலும், புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் தாமதமாவதாலும் தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.