மூன்று நாட்களில் 1,700... தொடர்ந்து ரத்தாகும் விமானங்கள்: வெளிவரும் காரணம்
ஊழியர்கள் பற்றாக்குறை, காலநிலை உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 1,700 விமானங்களை ரத்து செய்துள்ளது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
அமெரிக்க மக்கள் Halloween வார இறுதியை கொண்டாடிவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு பின்னர் விமான பயணங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் காலநிலை காரணமாக விமானங்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. சில நிறுவனங்கள் ஊழியர்களை காத்திருப்பில் வைத்தது. இதனால் அவர்கள் வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.
தற்போது விமான சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் விமானங்களை இயக்க ஊழியர்கள் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 800 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. ஞாயிற்றுக்கிழமை 800 க்கும் மேற்பட்டவிமானங்களை ரத்து செய்வதாக முன்கூட்டியே அறிவித்தது.
இதனிடையே, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சீமோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காத்திருப்பில் இருக்கும் 1,800 விமான ஊழியர்களைத் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம்.
டிசம்பர் இறுதிக்குள் மேலும் 600 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 4,000 விமான ஊழியர்களை வழக்கமான பணி சூழலுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.