விமானத்தினுள் திடீரென்று பரவிய வாசனை... வலுக்கட்டாயமாக கறுப்பினப் பயணிகளை வெளியேற்றிய ஊழியர்கள்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் திடீரென்று பரவிய வாசனையை அடுத்து, அதற்கு காரணம் கறுப்பினப் பயணிகள் என குறிப்பிட்டு விமான ஊழியர்களால் 8 பேர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அருவருப்பான உடல் வாசனை
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பயணிகள் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த 8 கறுப்பினப் பயணிகளும் முன் அறிமுகம் இல்லாதவர்கள் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பீனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ், விமான இலக்கம் 832ல் தயாராகி இருந்துள்ளனர். மட்டுமின்றி, அந்த 8 பேர்களும் விமானத்தின் பல பகுதிகளில் அமர்ந்திருந்துள்ளனர்.
ஆனால் அருவருப்பான உடல் வாசனை குறித்து அந்த விமானத்தில் பயணி ஒருவர் புகார் அளித்த நிலையில், திடீரென்று 8 கறுப்பினப் பயணிகளும் ஒவ்வொருவராக சுற்றி வளைக்கப்பட்டு, அந்த விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் நியூயார்க் செல்லும் வேறு விமானத்தில் அந்த 8 பேர்களையும் அனுப்பி வைக்க சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டுள்ளனர். இதனிடையே, வேறு விமானம் நியூயார்க் செல்லாத நிலையில், தொடர்புடைய விமானத்திலேயே அவர்களை பயணிக்க அனுமதித்துள்ளனர்.
ஆனால் தங்களால் ஒரு மணி நேரம் வீணானதாக குறிப்பிட்டு, பல வெள்ளையர்கள் முறைப்பதை தம்மால் உணர முடிந்தது என தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ள மூவரில் ஒருவரான Emmanuel Jean Joseph தெரிவித்துள்ளார்.
5 மனி நேரமும் அவதி
விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் கறுப்பின மக்கள் என்பதால், நடந்த சம்பவத்தை தமது அலைபேசியில் Xavier Veal என்பவர் பதிவு செய்துள்ளார். இது இன ரீதியான பாகுபாடு என்றே கறுப்பின விமான ஊழியர் ஒருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் 8 பேர்களும் விவாதித்து, இறுதியில் மூவர் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மீண்டும் அதே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டாலும், நியூயார்க் செல்லும் வரையில் அந்த 5 மனி நேரமும் அவதிப்பட்டதாகவும், அந்த முழு சம்பவமும் அதிர்ச்சிகரமாகவும், வருத்தமளிப்பதாகவும், அவமானகரமாகவும், பயமுறுத்தியதாகவும், இழிவானதாகவும் உணர்ந்ததாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிப்பதற்கு பதிலாக, இன பாகுபாடை தாங்கள் ஏற்பதில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும், விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |